பிரயாக்ராஜ்: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவை முன்னிட்டு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு, 5 கோடி பக்தர்கள் வருகை தந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பிரயாக்ராஜில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- 2019-ம் ஆண்டு பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவுக்கு, 4,000 ரயில்கள் இயக்கப்பட்டன. இம்முறை, 3 மடங்குக்கு மேல் ரயில்களை இயக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், நான்கு மடங்கு ரயில்களை இயக்கியுள்ளோம்.
இதற்கான பணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. மகா கும்பமேளாவுக்கு 16,000-க்கும் மேற்பட்ட ரயில்கள் 4.5 கோடி முதல் 5 கோடி பயணிகளை அழைத்து வந்து திருப்பி அனுப்பியுள்ளன. இதற்காக இணைந்து பணியாற்றிய அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகா கும்பமேளாவுக்காக ரயில்வே சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்தது. கங்கையின் மீது புதிய பாலம் உட்பட 21-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன என்றார் அஸ்வினி வைஷ்ணவ்.