மே 2023 முதல், மணிப்பூர் மாநிலத்தில் மைதேய் மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே மோதல்கள் வெடித்து, கலவரங்களுக்கு வழிவகுத்தது. அது இன்றுவரை தொடர்கிறது. இந்த வகுப்புவாத கலவரங்களால் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு முதல்வர் பிரேன் சிங் பதவி விலகினார். இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மணிப்பூரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மணிப்பூர் மாநில சாலைகளில் இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை பாதுகாப்பு படையினர் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து அவருக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கும், காவல்துறையினருக்கும் அவர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் ஆளுநர் அஜய் குமார் பல்லா, மணிப்பூர் மாநில அரசின் உயர் அதிகாரிகள், ராணுவம் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் பதவி விலகியதை அடுத்து மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சட்ட விரோதமாக கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை வைத்திருக்கும் அனைத்து போராட்டக் குழுக்களும் சரணடைய பிப்ரவரி 20-ம் தேதிக்குள் ஆளுநர் அஜய் குமார் பல்லா காலக்கெடு விதித்தார். இதையடுத்து மணிப்பூரின் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் கடந்த 7 நாட்களில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆயுதங்களுடன் சரண் அடைந்துள்ளனர். இதில், மைதேயி பயங்கரவாத அமைப்பின் அரம்பை தெங்கோல் பிரிவு சார்பில் 246 துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்பட்டன. இதனையடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க மக்கள் மேலும் கால அவகாசம் கோரியதையடுத்து ஆளுநர் இந்த நேரத்தை மார்ச் 6-ம் திகதி மாலை 4 மணி வரை நீட்டித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வரை 650 ஆயுதங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சரணடைய வரும் போராட்டக் குழுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளோம். நேற்று வரை 650 ஆயுதங்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.