இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகக் கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகர்வதால், இன்று தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 14ம் தேதி முதல் 16-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இன்று 35.6-37.4 டிகிரி ஃபாரன்ஹீட்டாக குறையலாம். 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து 35.6-37.4 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை பதிவின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.