சென்னை: தமிழக அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல் நாளான இன்று தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். நாளை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
எனவே, தேர்தலுக்கு முந்தைய திமுக அரசின் முழு பட்ஜெட் இதுவாகும். இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரை எப்படி நடத்துவது, ஆளும் தி.மு.க., மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சியின் மூத்த சீனியர்களில் ஒருவரான செங்கோட்டையன் கூட்டத்தை புறக்கணிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மூத்த தலைவர்களில் முக்கியமானவர் செங்கோட்டையன்.
இவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான அதிமுக ஆலோசனைக் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.