அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகரில் இருந்து, கோபாலபுரம் கிராமத்தில் துவங்கி, ராமசாமிபுரம் கிராமம் வரை, மேற்கு புறவழிச் சாலை மற்றும் ரயில்வே மேம்பாலம் அமைக்க, ரூ.154.98 கோடி நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து 2023-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணியில், மானாமதுரை – விருதுநகர் ரயில் பாதையின் குறுக்கே 22 பெட்டி பாலங்கள், 10 சிறு பாலங்கள், 3 சாலை சந்திப்புகள், 1 ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றன.
தற்போது இந்த புறவழிச்சாலையில் மொத்தம் 22 பெட்டி பாலங்களும், 9 சிறிய பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1 சிறிய பாலத்தின் மேல்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மொத்தமுள்ள 9.905 கி.மீ., சாலைப் பணிகளில், 7.50 கி.மீ., சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் பாலத்தின் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அருப்புக்கோட்டை பைபாஸ் ரோடு பணிகள் மந்தகதியில் நடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அருப்புக்கோட்டையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரின் முக்கிய சாலைகளான திருச்சுழி ரோடு, மதுரை ரோடு, பந்தல்குடி ரோடுகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிகளை விட்டுச் செல்லும் நேரங்களில் இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.
புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்தால், பந்தல்குடியில் இருந்து விருதுநகர், பாளையம்பட்டியில் இருந்து விருதுநகர், அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்லும் கனரக வாகனங்கள், அருப்புக்கோட்டை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரப்பகுதிகளை கடந்து மதுரை-தூத்துக்குடிக்கு சிரமமின்றி செல்ல முடியும். மேலும் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் புறவழிச் சாலை வழியாக மதுரை-தூத்துக்குடிக்கு செல்லலாம். கல்லூரி வாகனங்களும் நகருக்குள் செல்லாமல் புறவழிச் சாலையை பயன்படுத்த முடியும். எனவே இதனை கருத்தில் கொண்டு அருப்புக்கோட்டையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பைபாஸ் ரோடு பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.