தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை, வானதி உள்ளிட்ட கட்சித் தலைவர்களை போராட்டத்தில் ஈடுபடவிடாமல் தடுக்க போலீஸார் முன்கூட்டியே கைது செய்து மண்டபங்களில் தங்க வைத்தனர். ரூ.1000 கோடி பணப்பட்டுவாடா நடந்ததாகக் கூறி தமிழக பாஜக போராட்டம் அறிவித்தது. ஆனால், போராட்டத்தில் கலந்து கொள்ளவிடாமல் தடுக்க பாஜக தலைவர்களை அவர்களது வீடுகளில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
அதன்படி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் ஆகியோர் காரில் போராட்டத்துக்கு வந்து கொண்டிருந்தபோது, அக்கரை சோதனைச் சாவடி அருகே தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர். இதேபோல், சாலிகிராமத்தில் உள்ள பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை உள்ளிட்ட 50 நிர்வாகிகளை போலீஸார் அவர்களது வீடுகளில் இருந்து கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் அடைத்தனர். பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், எம்எல்ஏ சி.சரஸ்வதி, மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் போராட்ட இடம் முன்பு தலைமைச் செயலகம் அருகே கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், பல்வேறு இடங்களில் பாஜக தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபடவிடாமல் தடுத்து நிறுத்தி வீட்டுக்காவலில் வைத்தனர். இந்நிலையில், நேற்று காலை 9 மணி முதல் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்து திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, எம்எல்ஏக்கள் நைனார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், நாராயணன் திருப்பதி, விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, செயலாளர் அலிஷா அப்துல்லா, பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் மற்றும் 600-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது, பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் நெரிசலில் சிக்கியது. உடனே போலீசார் ஆம்புலன்சை மாற்று வழியில் திருப்பிவிட்டனர். பின்னர், அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர். இதனிடையே அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் வரும் பணத்தில்தான் ஆட்சி நடத்துகிறார்கள். அப்படி இல்லை என்று சொன்னால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யட்டும். திமுக வந்த பிறகு டாஸ்மாக் வளர்ச்சி 48 சதவீதம் உயர்ந்துள்ளது. வருமானம் அதிகரித்து ரூ. 33 ஆயிரம் கோடி. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின்தான் குற்றவாளி. தமிழகத்தின் நிலை டெல்லியை விட மோசமாக உள்ளது. எத்தனை கைது செய்யப்பட்டாலும், மக்களுக்காக பா.ஜ.க.வின் போராட்டம் தொடரும். இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 22-ம் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.