தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளில் இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இதில், இயற்பியல் வினாத்தாள் சற்று கடினமாகவும், பொருளியல் வினாத்தாள் எளிதாகவும் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ”இயற்பியல் வினாத்தாளில் 1 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களில் சில கடினமாக இருந்தது. 3 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. சராசரி மற்றும் மெதுவாக படிப்பவர்களுக்கு தேர்ச்சியில் சிக்கல் இருக்காது. அதேபோல் கலை பாடமான பொருளியல் வினாத்தாள் எளிதாக இருந்தது. இந்நிலையில், பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு விழாக்களும் நடைபெற்றன.

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.4 முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 46 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் திருத்தப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மதிப்பெண்கள் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் முடிந்து திட்டமிட்டபடி மே 9-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், தேர்வு முடிந்து மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேறும் போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, போலீஸ் அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மாவட்ட தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆனால், தேர்வு முடிந்ததும் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறைக்குள் மாணவர்கள் பட்டாசு வெடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உதவி ஆய்வாளர் தலைமையில் 4 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டிருந்த நிலையிலும் மாணவர்கள் பட்டாசு வெடித்தது குறிப்பிடத்தக்கது.