மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:- உலக வங்கி அறிக்கையின்படி இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை உள்ளது. நாட்டில் சரியான ஓட்டுநர் பயிற்சி வசதிகள் இல்லாததால் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நாடு முழுவதும் படிப்படியாக 1,600 ஓட்டுநர் பயிற்சி மையங்களை அமைக்க ரூ.4,500 கோடியில் திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தொடங்கப்படும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஓட்டுநர் பயிற்சி மையங்கள், பிராந்திய ஓட்டுநர் பயிற்சி மையங்களை அமைப்பதற்கு பொருத்தமான முன்மொழிவுகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் ஆண்டுக்கு 1.8 லட்சம் பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். இந்த விபத்துகளில் பெரும்பாலானவை பயிற்சி பெறாத ஓட்டுநர்களால் ஏற்படுகின்றன. இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.