பழநி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திரமும் ஒன்றாகும். இவ்விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீர் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேர் பந்தயம், ஏப்., 11-ல் நடக்க உள்ளது.
விழாவில், 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் செய்து வரும் வசதிகள் குறித்து பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து கூறியதாவது:- பக்தர்கள் நடந்து செல்லும் புதிய தாராபுரம் சாலை, பழைய தாராபுரம் சாலை, உடுமலை தேசிய நெடுஞ்சாலைகள் அருகே பல இடங்களில் இளைப்பாறும் கூடங்கள், தற்காலிக நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரிவீதி மற்றும் மலைக்கோயில்களில் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இரவில் நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஒளிரும் குச்சிகள் மற்றும் மணிக்கட்டுகள் வழங்கப்பட உள்ளன. பக்தர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தகவல் அறியும் வகையில், காவல்துறை உதவியுடன் பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்யவும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வழித்தடங்களில், மலைக்கோயில்கள், மலையடிவாரங்களில் பல்வேறு இடங்களில் முதலுதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மலையடிவாரம் மற்றும் மலைக்கோயிலில் பக்தர்கள் வெயிலில் சுட்டெரிக்காமல் இருக்க நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.