கோத்தகிரி: நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. இதனால் உற்பத்தி செலவு கூட கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மலை மாவட்டமான நீலகிரியில் மலை காய்கறி பயிர்களில் கேரட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் பல ஏக்கர் பரப்பில் கேரட் பயிர் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோத்தகிரி பகுதியில் கேரட் அதிகமாக பயிரிடப்படுகிறது.
இங்கு விளையும் கேரட் மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிக்கு எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்து, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள கேரட் மண்டிக்கு நீலகிரியில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவிலான கேரட் வருகிறது. அதுவும் தினமும் ஆயிரம் டன் வரை மேட்டுப்பாளையம் மண்டிக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாகவே கேரட் விலை மண்டிகளில் ரூ.100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் 50 ரூபாய்க்கு விற்பனையானது.
தற்போது கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநில கேரட் வரத்து மேட்டுப்பாளையம் ஏலம் மண்டிக்கு அதிகமாக வருவதால் விலை உச்சத்தில் இருந்த கேரட் தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தற்போது மேட்டுப்பாளையம் மண்டிகளில் கேரட் ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதனால் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, விலை தொடர்ந்து குறைந்து வருவதால், கேரட் உற்பத்தி செய்யும் செலவு, தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம், ஏற்றுமதி, வண்டி வாடகை என உற்பத்தி செலவு கூட மிஞ்சவில்லை என்றனர்.