மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டு கொரோனா உச்சியில், மருத்துவ துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவிட்-19 பரவல் வேகமாக இருந்த காலத்தில், நோயாளியை கொல்லும் வகையில் ஒரு மூத்த மருத்துவர் உத்தரவிட்டதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த உரையாடல் டாக்டர் சஷிகாந்த் தேஷ்பாண்டே மற்றும் டாக்டர் சஷிகாந்த் தாங்கே ஆகியோருக்கிடையே நடந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆடியோவில், டாக்டர் தேஷ்பாண்டே “அந்த பெண்ணை கொன்றுவிடு” என கூறுவதை கேட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த உரையாடல் டாக்டர் தாங்கே ஸ்பீக்கரில் வைத்தபோது நிகழ்ந்ததாகவும், அதை நோயாளியின் கணவர் நேரில் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் கௌசர் ஃபாத்திமா என்பவர். அவர் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால், சம்பவம் இடம்பெற்றதும் அவரது கணவர், சிகிச்சை முடிந்த பிறகு, காவல்துறையில் புகார் பதிவு செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் டாக்டர் தேஷ்பாண்டே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து உட்கீர் காவல்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. டாக்டர் தாங்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் மாவட்டத்திற்கு வெளியே இருப்பதால், விசாரணை சிறிது நேரம் நிலுவையில் உள்ளது. இந்த ஆடியோவில் சாதியை இழிவுபடுத்தும் வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன என்பது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மருத்துவமனையில் நோயாளிகளுக்கான படுக்கைகள் பற்றாக்குறையாக இருந்த நிலையில் இந்த உரையாடல் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நோயாளியின் உயிருடன் விளையாடும் முறையில் நடந்த இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள் மனித உயிரை காப்பதற்காக இருக்க வேண்டிய நேரத்தில், இத்தகைய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதற்கான கோபம் மற்றும் அதிர்ச்சி சமூகத்தில் நிலவுகிறது. அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தி, உண்மை வெளியிட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.