சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு பூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்வான மண்டல பூஜையின் போது, ஐயப்பனுக்கு 420 பவுன் தங்க அங்கி அணிவித்து வழிபாடு நடத்தப்படும். இதற்காக ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடந்த 25-ம் தேதி மாலை பம்பை வந்தடைந்தது.
அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின், கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை நேற்று நடந்தது. இதற்காக நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் காலையில் தொடங்கியது. மதியம் 12.30 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தலைமையில் தந்திரிகள் கண்டரரு ராஜீவரும், பிரம்மதத்த ராஜீவரும் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்தனர். சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு நடை அடைக்கப்பட்டது.

மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை உள்ளிட்ட வழிபாடு நடைபெற்றது. மண்டல பூஜை என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க 60 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று இரவு 11 மணியளவில் ஹரிவராசனம் பாடலுக்கு பின் கோவில் நடை அடைக்கப்பட்டது.
முன்னதாக, மண்டல பூஜை தொடர் வழிபாடுகளின் போது பாதை மூடப்பட்டாலும், பக்தர்கள் கருவறையில் தங்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று மண்டல பூஜை முடிந்ததால், பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படவில்லை. இரவு கோவில் வளாகத்தில் இருந்து பம்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்காக இரவு முழுவதும் பல்வேறு ஊர்களுக்கு தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.
வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மகரவிளக்கு பூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ம் தேதி நடக்கிறது. மகரவிளக்கு பூஜைக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது. இதில் தேவசம் அமைச்சர் வாசவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதைத் தொடர்ந்து, கருவறை முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.