ஐதராபாத்: எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் ஆஜராகும் தேதியை மாற்றுமாறு அமலாக்கத்துறைக்கு நடிகர் மகேஷ் பாபு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக எஸ்.எஸ்.எம்.பி 29 எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 22-ம் தேதி பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. சுரானா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் விளம்பர தூதராக மகேஷ் பாபு உள்ளார். இந்த நிறுவனங்களின் மீது பண மோசடி, ஒரே இடத்தை பலருக்கு விற்றது, ஒப்புதல் அளிக்காத வீடுகளை விற்பனை செய்தது உள்ளிட்ட புகார்கள் எழுந்த நிலையில், அங்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அப்போது, இந்த நிறுவனங்களிடம் இருந்து நடிகர் மகேஷ் பாபு ரூ.5.9 கோடி பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, பணமோசடி தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதில் இன்று 28-04-25 ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் ஆஜராகும் தேதியை மாற்றுமாறு அமலாக்கத்துறைக்கு மகேஷ் பாபு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.