மும்பை: நடிகர் ஹிருத்திக் ரோஷன் இயக்குனராக அறிமுகமாகிறார் என்று மும்பை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஹிருத்திக் ரோஷன் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ படம் கிரிஷ். இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றநிலையில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. அதன்படி, கடைசியாக இதன் 3-ம் பாகம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது.
கிரிஷ் 3 வெளியாகி 10 வருடங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் கிரிஷ்4 பாகம் எப்போது உருவாகும் என கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கிரிஷ் 4 பாகத்தை ஹிருத்திக் ரோஷன் நடித்து இயக்க திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு பணிகள் அடுத்தாண்டு தொடங்கபடும் என தகவல் வெளியாகியுள்ளது.
கிரிஷ் 4 படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் ஆதித்யா சோப்ரா இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் ரூ. 700 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பைட்டர்’. தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்த இந்த திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். அனில் கபூரும் பைட்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவரை நடிகராக கலக்கி வந்த ஹிருத்திக் ரோஷன், தற்போது கிரிஷ் 4 படம் மூலம் இயக்குனராக களமிறங்கி உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.