
மலையாள நடிகர் சுரேஷ் கோபி தமிழில் அஜித்தின் ‘தினா’, ஷங்கரின் ‘ஐ’, விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவர் ஏற்கனவே ‘ஒற்றக்கொம்பன்’ உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அந்த படங்களில் நடிக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு சுரேஷ் கோபி கூறியிருந்தார்.

ஆனால் மத்திய அரசு அவருக்கு படங்களில் நடிக்க அனுமதி மறுத்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், ‘ஒற்றக்கொம்பன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் 29-ம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.