30 மணி நேரத்தில் பல இடங்களில் 200 மி.மீ மழை பதிவு… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 30 மணி நேரத்தில் பல இடங்களில் 200 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
கட்ச் பகுதியில் பெய்த கனமழையால் காந்திதாம் ரயில் நிலையத்தில் மழைநீர் தேங்கியது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கனமழை தொடர்பான விபத்துகளில் கடந்த 3 நாட்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூனாகத், ஜாம்நகர், கட்ச், வல்சாத், நவ்சாரி, மெஹ்சானா மற்றும் சூரத் ஆகிய இடங்களில் பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
அகமதாபாத் உட்பட பல்வேறு நகரங்களின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மின்வெட்டு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.