May 14, 2024

ஆப்கானிஸ்தானின் அசத்தல் வெற்றி… இந்திய முன்னாள் வீரருடன் ஆட்டம் போட்ட ரஷீத் கான்

சென்னை: சென்னையில் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 22ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 282 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் எடுத்தார். அப்துல்லா ஷபீக் 58 ரன்களும், ஷதாப் கான் 40 ரன்களும், இப்திகார் அகமது 40 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டிற்கு 130 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க பலம் வாய்ந்த பாகிஸ்தான் பவுலர்கள் திணறி வந்தனர். இதில், குர்பாஸ் 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ரஹ்மத் ஷா, ஜத்ரன் உடன் இணைந்து நிதானமாக விளையாடினார். இதில், ஜத்ரன் 113 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 87 ரன்கள் குவித்து 13 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிடி 45 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 48 ரன்கள் சேர்த்தார். ரஹ்மத் ஷா 84 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 77 ரன்கள் குவித்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக முதல் முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. மேலும், 7 ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தி சரித்திரம் படைத்துள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் 2வது வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக ஆப்கானிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 6வது இடம் பிடித்துள்ளது.

பாகிஸ்தான் அணி உடனான வெற்றிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் மைதானத்திலேயே இர்பான் பதான் உடன் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!