மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.1900 கோடியாக உயர்வு
புதுடெல்லி: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து தமிழகத்தில் மருத்துவத்துறை தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, குடியரசுத் தலைவர் மூலம், அவரது அலுவலகம் மூலம், உள்துறை அமைச்சகம், சுகாதாரம், ஆயுஷ் மற்றும் உயர்கல்வித்துறை சார்பில், தமிழக அரசுக்கு ஏற்கனவே பல்வேறு விளக்கங்களை அனுப்பியிருந்தனர். இதுகுறித்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விளக்கங்கள் அனுப்பப்பட்ட விவரங்களை தெரிவித்தோம். அதை பொறுமையாக கேட்ட அவர், தங்களால் முடிந்ததை பரிசீலிப்போம் என்றார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை விரைவில் தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 3 ஆண்டுகளாகியும் பணிகள் நடைபெறாமல் உள்ளதால், சுற்றுச்சுவர் மட்டும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
எங்கள் கோரிக்கையை அமைச்சர் செவிசாய்த்தார். எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடு ரூ.1400 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இப்போது ரூ.1900 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசகரை நியமித்து வரைபடம் தயாரிக்க வேண்டும். இதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.