ராகுல் காந்தியை சந்தித்தது வீரர்களுக்கு நல்லதல்ல… சஞ்சய்சிங் கருத்து
விளையாட்டு: மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த நிர்வாகக் குழு சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சஞ்சய் சிங் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
“நடந்து முடிந்த கூட்டமைப்பின் தேர்தலுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தேர்தல் அதிகாரியாக இருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பில் இருந்து பார்வையாளர்கள் இருந்தனர். தேர்தல் ஜனநாயக முறையில் நடந்தது, கட்சி சார்பற்றது.
எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தங்களின் சிறந்த நிலையை கடந்துவிட்டனர். பஜ்ரங் புனியா தனது கடைசி போட்டியில் 10-0 என்ற கணக்கில் தோற்றார். இப்போது அவர்கள் அரசியலுக்காக மல்யுத்தத்தை கைவிடுகின்றனர். ராகுல் காந்தி அவர்களை சென்று சந்தித்துள்ளார். இது வீரர்களுக்கு நல்லதல்ல.
இந்த வீரர்கள், இளைய வீரர்கள் முன்னேறுவதை விரும்பவில்லை. அவர்கள் அரசியல் செய்கிறார்கள். ஒரு கட்சியை அல்லது சில கட்சிகளை சென்று சந்திக்கிறார்கள். நான் கடந்த 10 -12 வருடங்களாக மல்யுத்தத்துடன் தொடர்பில் இருக்கிறேன். எப்போதாவது ஒரு மல்யுத்த வீரரை அவமரியாதையாக நடத்தி இருந்தால் அவர்கள் ஆதாரத்தைக் காட்டட்டும். வீரர்கள் பதக்கங்களைத் திருப்பிக் கொடுத்தது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்திருக்கக் கூடாது. நமது மக்களின் பணமும் உணர்வுகளும் அவர்களை நட்சத்திரங்களாக்கின” என்று சஞ்சய் சிங் கூறினார்.