திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஷவர்மா சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி-பேதி ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட பலருக்கும் வாந்தி பேதி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கேரளாவில் துரித உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஓட்டல் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இந்நிலையில் திருவனந்தபுரம் கிளிப்பாலம், கரமன், அட்டுக்கல், மணக்காடு, கமலேஸ்வரம், ஸ்ரீவராகம் மற்றும் பேட்டா பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி-பேதி ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இவர்கள் அட்டக்குளங்கரா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து ஷவர்மா வாங்கி சாப்பிட்டதால் தான் உடல் நலபாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட உணவகம் சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த உணவுகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.