பெங்களூர் : மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா வருகிற செப்டம்பர் 22-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த விழா அக்டோபர் 2-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. இதில் முக்கியமாக யானைகள் பங்கேற்கும் ஜம்பு சவாரி ஊர்வலம் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
இதை காண கர்நாடகம், பிற மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருவார்கள். இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் விமான சாகச நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் முதல்-மந்திரி சித்தராமையா நேரில் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று மைசூருவில் தசரா விழாவின்போது, விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் இதற்காக நன்றி தெரிவித்து ராஜ்நாத்சிங்கிற்கு சித்தராமையா கடிதம் அனுப்பியுள்ளார்.