புது டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரிப்பது குறித்து கவலை கொண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இரு நாடுகளும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை உணர்வில் செயல்படவும், அமைதியைப் பேணவும், பிரச்சினைக்கு அமைதியான அரசியல் தீர்வைக் காணவும், பதற்றத்தை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் நடவடிக்கைகள் ஆத்திரமூட்டும் தன்மை கொண்டவை என்றும் பதட்டங்களை அதிகரிக்கக்கூடும் என்றும் நான் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளேன். பாதுகாப்புக்காக இந்தியா இதற்கு பொறுப்பான மற்றும் அளவிடப்பட்ட முறையில் பதிலளித்துள்ளது” என்று அவர் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 22 அன்று, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த புதன்கிழமை நள்ளிரவு இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து, இந்திய கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள எல்லை கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
வியாழக்கிழமை இரவு, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கிய தயாரிப்பு ட்ரோன்களை இந்திய ராணுவம் ‘சுதர்சன சக்கரம்’ (S-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களுடன் சுட்டு வீழ்த்தியது. அதன் பிறகும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடித் தாக்குதல்களும் தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.