புது டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசாங்கத்தில் சுகாதார அமைச்சர் மற்றும் குடிநீர் வாரியத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை சவுரப் பரத்வாஜ் வகித்துள்ளார். தற்போது அவர் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பிரிவின் தலைவராக உள்ளார். இந்த சூழ்நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் போது மருத்துவ கட்டுமானத் திட்டங்களில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததாக பாஜக அளித்த புகாரின் பேரில் டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இது தொடர்பாக, ஏசிபி அதிகாரிகள் கூறுகையில், “2018-19-ம் ஆண்டில், ரூ.5,590 கோடி மதிப்புள்ள 24 மருத்துவமனைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோல், ரூ.1,125 கோடி மதிப்புள்ள ஐசியு மருத்துவமனைத் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன” என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், டெல்லியில் முன்னாள் அமைச்சர் சவுரப் பரத்வாஜின் வீட்டிலும், அவருக்கு தொடர்புடைய 12 இடங்களிலும் அமலாக்க இயக்குநரகம் நேற்று சோதனை நடத்தியது.
இந்த சோதனை குறித்து, முன்னாள் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், “இந்த சோதனை மோடி அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு. வரலாற்றில் எந்தக் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியைப் போல குறிவைக்கப்படவில்லை” என்று எக்ஸ்-தளத்தில் கூறினார்.