
பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.63 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. பெங்களூரு மற்றும் சிவமோகா மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இவையெல்லாம் அந்த வங்கிகளில் மிகப்பெரிய அளவில் ரொக்கம் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து செய்யப்பட்ட சோதனைகள்.

சோதனையில், முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. சிவமோகா மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் மஞ்சுநாதா கவுடா என்பவரின் அறிவுறுத்தலின் பேரில், கிளை மேலாளர் ஷோபனா இந்த முறைகேட்டில் ஈடுபட்டது என்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்தது.
போலி நகைக் கடன் கணக்குகளை உருவாக்கி, மோசடி ஆவணங்களை பயன்படுத்தி சுமார் ரூ.63 கோடி வரை மோசடியில் ஈடுபட்டார் ஷோபனா. அதில், மோசடி செய்த பணத்தில் கவுடாவுக்கும் பங்கு உள்ளது. இந்த பணத்தை வைத்து அவை சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இதன் தொடர்பாக லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் மஞ்சுநாதா கவுடாவை கைது செய்த அமலாக்கத்துறை, அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, 14 நாட்கள் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதியளிக்கப்பட்டது.