திருச்சி: திருச்சி அரியமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் திருச்சியைச் சேர்ந்த திருநங்கை சாரங்கன், 32, கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில், சி.பி.1ல், சில மாதங்களுக்கு முன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாரீஸ்வரன் என்ற சிறை காவலர், சாரங்கனை ஓரின சேர்க்கைக்கு அடிக்கடி அழைத்தார்; இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி., ஜெயபாரதியிடம் சாரங்கன் புகார் அளித்தும், கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்டப் பணிகள் ஆணையத்தில் சாரங்கன் புகார் அளித்தார்.
சுப்புராமன் என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு விசாரணை நடந்தது. திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி., ஜெயபாரதி, ஏட்டு மாரீஸ்வரன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, சிறைத்துறை ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் கடந்த 11ம் தேதி உத்தரவிட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன் டிஐஜி ஜெயபாரதி வேலூர் பயிற்சி பள்ளி டிஐஜியாகவும், ஆண்டாள் திருச்சி பயிற்சி பள்ளி கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
புகாரை தள்ளுபடி செய்வதற்கான காரணம்
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட மாரீஸ்வரன், சென்னையில் உள்ள சிறைத்துறை முன்னாள் ஏடிஜிபி வீட்டிலும், பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட பதவியில் அதிகாரியுடன் பணிபுரிந்துள்ளார். அந்த செல்வாக்குடன் மாரீஸ்வரன் மீதான புகார் கிடப்பில் போடப்பட்டுள்ளது. புகாரை தவிர்க்க 50,000 ரூபாய் கை மாறியதாகவும் கூறப்படுகிறது.