கடப்பா: தெலுங்கு வருட பிறப்பை குறிக்கும் உகாதி பண்டிகை நேற்று முன்தினம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையானை உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள தேவுன்னி கடப்பா ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

இங்கு மட்டும், ஆண்டுதோறும் உகாதி பண்டிகையின் போது, ஏழுமலையானையை வழிபடுவதை, அப்பகுதி முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டு, இஸ்லாமியர்கள், பாலின வேறுபாடின்றி, குடும்பம் குடும்பமாக வந்து, லட்சுமி வெங்கடேஸ்வரரை பயபக்தியுடன், தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
அவர்களுக்கு கோவில் சார்பில் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இதை பக்தியுடன் ஏற்றுக்கொண்டனர். இங்குள்ள முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் உகாதி பண்டிகையை முன்னிட்டு பீபீ நாச்சரம்மா அன்னைக்கு பட்டு வஸ்திரம், துவரம் பருப்பு, மிளகாய், உப்பு போன்றவற்றை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டும் அதையே வழங்கினர்.