புது டெல்லி: டெல்லியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் 11-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தேசிய மருத்துவ ஆணையத் தலைவர் டாக்டர் அபிஜித் சேத் விழாவுக்குத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “உலக சுகாதார அமைப்பின் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற பரிந்துரையின்படி, நாடு முழுவதும் மருத்துவர்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களின் விகிதத்தை 1:1 என்ற அளவில் அடையவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது இந்தியாவின் சுகாதார அமைப்பின் தரத்தை வளர்ந்த நாடுகளுக்கு இணையாகக் கொண்டுவரும். மருத்துவ அறிவியல் தேர்வு வாரியமும் தேசிய மருத்துவ ஆணையமும் திறன் சார்ந்த மருத்துவக் கல்வியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகின்றன.

மாணவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும் வாழ்நாள் முழுவதும் கற்பவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சுனிதா சர்மா கூறுகையில், “இன்று, டாக்டர் பட்டம் பெறுபவர்கள் மற்றவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்.
நீங்கள் மனசாட்சியுடனும் அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் பணிவுடன் மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும்.”