காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அகமதாபாத்தில் நடைபெற்ற 84வது தேசிய மாநாட்டின் கீழ் காங்கிரஸ் செயற்குழு (CWC) மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தார்.

அந்த நிலையில், சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற ப.சிதம்பரம் மயக்கம் அடைந்து கிழே விழுந்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிதம்பரத்தின் மயக்கத்தின் காரணம், கடுமையான வெயிலின் தாக்கம் என்றும் கூறப்பட்டது.
அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ப.சிதம்பரத்திற்கு அவர் மகன் கார்த்தி சிதம்பரம், தனது தந்தை நலமுடன் இருக்கிறார் என தெரிவித்தார்.
இந்தத் தகவலுக்கு பின்னர், பிரதமர் மோடி ப.சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டு, அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் உத்தரவிட்டார். அதன்பிறகு, மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா குஜராத்தின் முதல்வரை தொடர்புகொண்டு, ப.சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். குஜராத்தின் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல், மருத்துவமனைக்கு நேரில் சென்று தேவையான மருத்துவ உதவியை உறுதி செய்தார்.
ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “அதிக வெப்பம் காரணமாக எனக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது. அனைத்து சோதனைகளும் இயல்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.