புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தை மற்ற மாநிலங்களுடன் இணைக்கும் கங்கா-யமுனை உட்பட 11 தேசிய நீர்வழிகள் உள்ளன. இதன் காரணமாக மாநிலத்தில் நீர் போக்குவரத்து மற்றும் நீர் சுற்றுலாவை முதல்வர் யோகி அரசு ஊக்குவித்து வருகிறது. முதற்கட்டமாக 11 ஆறுகளில் 761 கி.மீ தூரத்திற்கு நீர்வழிப்பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, 11 ஆறுகளின் தாழ்வான பகுதிகளில் மேடைகள் மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
இதை செயல்படுத்த உள்நாட்டு நீர்வழி ஆணையத்தை உ.பி அரசு அமைத்துள்ளது. பிரயாக்ராஜ், வாரணாசியில் இருந்து காஜிபூர் வழியாக ஹால்டியா செல்லும் பாதை கங்கை நதியில் நீர்வழிப்பாதை அமைக்க தயாராக உள்ளது. அடுத்தகட்டமாக கான்பூர் வழியாக ஃபரூக்காபாத் வரை நீட்டிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதேபோல், யமுனா, சரயு மற்றும் காக்ரா, கோமதி, சம்பல், பெத்வா, வருணா, கர்மனாஷா, ரப்தி, மந்தாகினி மற்றும் கென் ஆகிய நதிகளில் நீர் சுற்றுலாவின் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதற்காக பொதுப்பணித்துறை, சுற்றுலா மற்றும் கலாச்சாரம், பாசனம் மற்றும் நீர்வளம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் பொறியாளர்கள் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

இந்தக் குழு, 11 நதிகளின் தோற்றம் முதல் பெரிய ஆற்றில் இணையும் இடம் வரை அனைத்தையும் கணக்கெடுக்கும். நீர் போக்குவரத்து மூலம் சரக்கு மற்றும் பயணிகளை எங்கு கொண்டு செல்வது பொருத்தமானது என்பதை குழு கண்டறியும். இத்திட்டத்திற்கு முதல்வர் யோகி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. லக்னோவில் உள்ள மாநில கட்டுமான கூட்டுறவு சங்கத்தின் 2-வது தளத்தில் இதற்கான அலுவலகம் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பிரயாக்ராஜில் இருந்து கொல்கத்தாவுக்கு சிமென்ட் பைகள் சிறிய கப்பல்களில் அனுப்பப்பட்டன. பின்னர் நீர்வரத்து குறைந்ததால் கப்பல் போக்குவரத்தை அப்போதைய அரசு நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.