முருங்கை மரத்தின் இலை, பூ, காய் என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் நிறைந்தது. ஒவ்வொரு பகுதிகளும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும். இந்த பதிவில் நம் முருங்கைப் பூவில் நிறைந்துள்ள நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்.
முருங்கைப் பூவுடன் சமளவு துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து பகலில் சாப்பிட்டு வர, உடலில் வலு ஏற்படும். ரத்தம் அதிகரிக்கும். முருங்கைப்பூவை நன்றாக அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டை சேர்த்து காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் நமது நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கை பூவை நிழலில் உலரவைத்து பொடியாக்கி தினமும் கஷாயம் செய்து காலை மாலை என்று இரண்டு வேலையும் அருந்தி வந்தால் உடலில் இருக்கும் பித்தம் குறைந்து, உடலின் அசதி நீங்கி உடல் நிலை சீரடையும்.
முருங்கை பூவை பாலில் வேகவைத்து பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும், நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.