இன்றைய வேகமான வாழ்க்கை முறை மக்களை செரிமான ஆரோக்கியத்தைப் பற்றி கவனம் செலுத்தாமலேயே நடத்தி வருகிறது. உண்மையில், குடல் என்பது உணவை ஜீரணிக்கும் உறுப்பாக மட்டும் அல்ல; அது நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை மற்றும் ஒட்டுமொத்த நலம் ஆகியவற்றின் அடிப்படையாகும். சமீபத்திய ஆய்வொன்றின் படி, 74% பெண்களும் 64% ஆண்களும் தினசரி தேவையான அளவுக்கு நார்ச்சத்து உட்கொள்வதில்லை. மேலும், 78% இந்தியர்களுக்கு நார்ச்சத்தின் முக்கியத்துவம் பற்றிய புரிதல் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நார்ச்சத்து என்பது குடலுக்குள் இருக்கும் நுண்ணுயிரிகளை வளர்க்கும் ப்ரீபயாடிக் மூலப்பொருளாக செயல்படுகிறது. இவை முழுத்தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைந்து காணப்படுகிறது. ஆனாலும், கணக்கெடுப்பின்படி 70% பேர் தினமும் பழங்களைச் சாப்பிடுவதில்லை. 55% பேர் மட்டும் ஒருநாளில் ஒருமுறையே காய்கறிகளை எடுத்துக்கொள்கிறார்கள்.
இவ்வாறான உணவுமுறைகள் மட்டுமல்லாமல் தூக்கம் மற்றும் மன அழுத்தமும் குடல் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்துகின்றன. தூக்கமின்மை குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையை பாதிப்பதுடன், இன்ஃப்ளமேஷன் அதிகரித்து, IBS போன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது. அதேபோல் மன அழுத்தமும் குடலின் ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இது செரிமானத்தை மெதுவாக்கி, “கசிவு குடல்” எனப்படும் நிலைக்கு வழிவகுக்கிறது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எளிய வழிகள் உள்ளன. தினசரி உணவில் நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்க வேண்டும். முழுத் தானிய ரொட்டிகள் கூட நார்ச்சத்தை வழங்கும் நல்ல ஆதாரமாக இருக்கும்.
தூக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் 7–8 மணிநேரம் தரமான தூக்கம் உறுதி செய்யப்பட வேண்டும். இரவின் திரை நேரம் குறைத்தல், அமைதியான தூக்க சூழலை உருவாக்குதல் ஆகியவை நல்ல தூக்கத்துக்கு உதவும்.
மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துதல் அவசியம். தினமும் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாச பயிற்சி மேற்கொள்வது கார்டிசோல் ஹார்மோனின் அளவை குறைத்து குடலின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
நீரளவு போதுமானதாக இருக்க வேண்டும். நார்ச்சத்துடன் கூடிய உணவுகளை உட்கொள்ளும் போது அதிக தண்ணீர் குடிப்பதும், ஒழுங்கான உடல் இயக்கங்களை மேற்கொள்வதும் செரிமானத்தை தூண்டும்.
இந்த மூன்று முக்கிய அம்சங்களை — நார்ச்சத்து, தூக்கம் மற்றும் மன அமைதி — நாம் நன்றாக நிர்வகித்தால், குடல் ஆரோக்கியத்தோடு ஒரு முழுமையான நலவாழ்வை அடைய முடியும்.