சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். இந்நிலையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசியதாகவும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதை கண்டித்தும் தமிழக காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.
அதன்படி நேற்று மயிலாப்பூரில் உள்ள அம்பேத்கர் பாலத்தில் (சிட்டி சென்டர் அருகில்) செல்வப்பெருந்தகை தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா திரும்பிச் செல்ல வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு ரிப்பன் அணிந்த புறாவை விடுவித்து போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கிராமக் குழு சீர்திருத்தக் குழுத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அசன் மவுலானா எம்எல்ஏ, துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், கோபண்ணா, பொதுச் செயலர்கள் தளபதி பாஸ்கர், காண்டீபன், டி.செல்வம், அமைப்புச் செயலர் ராம் மோகன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பொறுப்பாளர் தாம்பரம் நாராயணன், திருவான்மியூர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட செல்வப்பெருந்தை உள்பட 250 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்க வைத்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.