சென்னை: அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறை அமைச்சராகவும், திமுக பொதுச்செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன் (86). வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து வருகிறார். அரசு நிகழ்ச்சிகள் தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் குறைத்துக்கொண்டார்.
இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் நேற்று காலை திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி மற்றும் காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.