லக்னோ: 75 வயதுக்கு மேற்பட்ட பாஜகவினர் மத்திய, மாநில அரசுகளில் அமைச்சர் பதவியில் இருப்பதில்லை என்பது எழுதப்படாத விதி. அந்த வகையில், வரும் செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு 76-வது பிறந்தநாள். எனவே, பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி விரைவில் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, சிவசேனா (உத்தவ் பிரிவு) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது, நரேந்திர மோடி பதவி விலகப் போவதாகவும், அதன்பிறகு நீங்கள் (யோகி) பிரதமராக பதவியேற்க உள்ளதாகவும் வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில், நான் இப்போது உத்தரபிரதேச முதல்வராக இருக்கிறேன்.மாநில மக்களின் நலனுக்காக இந்த பொறுப்பை பாஜக கொடுத்தது.

அரசியல் எனது முழுநேர வேலை அல்ல. இப்போது முதல்வராக பணியாற்றுகிறேன். ஆனால் உண்மையில் நான் துறவி. அரசியல் எனது நிரந்தர தொழில் அல்ல. ஒரு சாமானியனாக எனது அரசியல் சாசனப் பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறேன். நான் என்னை சிறப்பு என்று கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை நாடு எல்லாவற்றுக்கும் மேலானது. என் நாடு பாதுகாப்பாக இருந்தால், என் தர்மமும் பாதுகாப்பாக இருக்கும். தர்மம் பாதுகாப்பாக இருந்தால், அது மக்கள் நலனுக்கு வழிவகுக்கும்.
ஒழுக்கம் கற்றுக்கொள்ள வேண்டும்: யோகி மேலும் கூறியதாவது: உ.பி.,யில் சாலைகளில் பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலைகள் நடப்பதற்காகவும், வாகனங்கள் செல்லவும் அமைக்கப்பட்டவை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்துக்களிடம் சமய அறநெறிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 66 கோடி பேர் பங்கேற்றனர். எங்கும் வன்முறை அல்லது பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் இல்லை.
இதுதான் மத ஒழுக்கம். அரசு சொத்துக்களை அபகரிக்கும் ஊடகமாக வக்பு வாரியம் மாறிவிட்டது. அதனால்தான் வக்ஃப் சட்டத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது காலத்தின் தேவை. அதேநேரம், இந்த புதிய சட்டத்தால் முஸ்லிம்களும் பயன்பெறுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.