சென்னை: ஜனநாயகத்தின் காவலன் என்று மீண்டும் ராகுல் காந்தி நிரூபித்துள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: குஜராத் மாடல் என்றால் அது வளர்ச்சி அல்ல, வாக்கு திருட்டு தான் என்று மக்கள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் இன்று பீகார் மாநிலத்தில் வெளிப்படையாக கூறியிருப்பது உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மக்களின் நம்பிக்கையை பறித்து ஆட்சியைப் பிடிக்கும் பாசிச ஒன்றிய அரசின் முகமூடியை கிழித்து எறியும் வலிமையான வார்த்தைகளாக இது திகழ்கிறது.
இந்திய ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டத்தில் இவ்வாறு வெளிப்படையான நிலைப்பாடு எடுக்கும் ராகுல் காந்தி அவர்களின் உரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனமுவந்து வரவேற்கிறது.
நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் உண்மையான மாற்றத்தின் குரல் என்றும், ஜனநாயகத்தின் காவலன் என்றும் அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.