சென்னை: யாருடன் கூட்டணி என்பது குறித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக ஐ.எஸ்.இன்பதுரை, ம. தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2026-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலின்போது, தே.மு.தி. க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை சீட் தருவதாகக் கூறி தனது கடமையை செய்துள்ளது அ.தி.மு.க.
அனைத்து கட்சிகளிலும் அரசியல் என்பது தேர்தலை நோக்கிதான் செல்கிறது. 2026 தேர்தலையொட்டி தான் ராஜ்யசபா சீட் அறிவிக்கப்பட்டு உள்ளது. தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது.
2024 தேர்தலின்போது மாநிலங்களவை சீட் குறித்து எந்த வருடம் என குறிப்பிடாமல்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அறிவிக்கும் இடத்தில் அ.தி.மு.க. உள்ளதால் அதன் கடமையை தற்போது செய்துள்ளது.
யாருடன் கூட்டணி? என்பது குறித்து ஜனவரி மாதம் நடக்கும் தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிக்கப்படும். தி.மு.க. பொதுக்குழுவில் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.