சென்னை: தமிழ்நாட்டில் தொழில்துறையை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, 5000 கோடி ரூபாய் முதலீட்டில் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்காக, எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தோல் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனத்துக்குள் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் முதலீடுகளை அதிகரித்து, புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 5000 கோடி ரூபாய் முதலீட்டில், 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இந்த புதிய திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த தொழிற்சாலைகளை அமைப்பதால், அந்த பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைய உள்ளது.
இந்த முதலீட்டின் மூலம், தொழில்துறையில் பின்தங்கிய கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். தொழில்துறை வளர்ச்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வாய்ப்புகள் அதிகரிப்பதால், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் தனிநபர் வருமானம் உயரும்.
மாநிலத்திலேயே முக்கிய முதலீட்டு திட்டமாக அமைந்துள்ள இந்த ஒப்பந்தம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் செயலாளர் வி.அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, எவர்வான் ஷுடவுன் குழுமத்தின் தலைவர் ரான், கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ரஃபீக் அகமது, செயல் துணைத் தலைவர் பி.கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.