கரூர்: கரூர் அருகே 1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் அருகே சங்கரன் மலைப்பட்டியில் மலை உச்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு: போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே 1,000 ஆண்டு பழமையான சங்கரன்மலைப்பட்டியில் மலை உச்சியில் சௌந்தரநாயகி உடன் சங்கரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவில் பொன்னர், சங்கர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு குறித்த கல்வெட்டுகள் கோவில் மலை பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை ஊர் பொதுமக்கள் பங்களிப்புடன் அறநிலையத் துறையினர் பணியை துவங்கி உள்ளது.
இந்நிலையில் மலை உச்சியில் கோவில் கோபுரத்தில் உள்ள விலை உயர்ந்த கலசம் நேற்று முன்தினம் இரவு திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாயனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பழமையான மலை உச்சியில் கலசம் இருந்ததால் சுற்றுவட்டாரப் பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இதுவரை இடி, மின்னல் தாக்கியது இல்லை. எந்த ஒரு பாதிப்பும் நடக்கவில்லை என ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.