சென்னை: சென்னையில் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இந்த நிகழ்வில் பங்கேற்பார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நாட்டிலேயே முதல் முறையாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் செப்டம்பர் 15, 2022 அன்று மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த இடமான திருக்குவளையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் நீட்டிப்பை முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 25, 2023 அன்று தொடங்கி வைத்தார்.

இதன் மூலம், 30,992 பள்ளிகளில் படிக்கும் 18.50 லட்சம் மாணவர்கள் சூடான மற்றும் சுவையான காலை உணவை சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் தங்கள் பள்ளி பாடங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, ஜூலை 15, 2024 அன்று, காமராஜரின் பிறந்தநாளில், திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது, இதன் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 2.24 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது, குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தியுள்ளது, மேலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளில் முந்தைய பாடங்களை நினைவில் கொள்ளும் திறனை அதிகரித்துள்ளது என்று ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து விடுபட்டுள்ளனர், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்கள் பள்ளிகளில் காலை உணவு சிற்றுண்டி திட்டத்தைத் தொடங்கியுள்ளன. கனடா அரசும் தனது நாட்டில் தமிழ்நாடு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த சூழலில், முதல்வரின் காலை உணவு திட்டம் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று மார்ச் 14 அன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல்வர் ஸ்டாலின் 26-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்பார். இந்த திட்டத்தின் மூலம், தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3.05 லட்சம் மாணவர்கள் தினமும் பயனடைவார்கள்.