சென்னை: குடும்ப பிரச்சனை அடிப்படையில் பணி இடைநீக்கம் செய்யபட்ட தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் திருநாவுக்கரசு மீதான நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. திருநாவுக்கரசு கடந்த 2023 ஏப்ரல் 30ஆம் தேதி ஓய்வுபெற இருந்த நிலையில், அவரின் மருமகள் அளித்த வரதட்சணை புகாரின் அடிப்படையில் அவரது மகன் மற்றும் அவருக்கு எதிராக செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை காரணம் காட்டி, பல்கலைக்கழகம் திருநாவுக்கரசுவை ஓய்வுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கில், நீதிபதி அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குடும்ப பிரச்சனையை சார்ந்தவை என்பதால், அது ஒரு பணியிடை நீக்கம் செய்யத்தக்க காரணமல்ல என்றும், அவரைப் பணி ஓய்வு அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக பல்கலைக்கழகம் மேல்முறையீடு செய்தது. ஆனால் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, குடும்ப பிரச்சனை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதையே பொதுநலன் எனக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தனர். பல்கலைக்கழக விதிகளில், பொதுநலனுக்கேற்பவே பணியிடை நீக்கம் செய்ய முடியும் என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இதனால், பல்கலைக்கழகத்தின் மேல்முறையீட்டு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், பணியிடை நீக்கம் செல்லாது என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருநாவுக்கரசுவுக்கு அவர் பெறவேண்டிய ஓய்வு கால பலன்கள் அனைத்தும் 12 வாரங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.