சென்னையில் இன்று தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி ஆலோசனை தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 3.11 கோடி ஆண்கள், 3.24 கோடி பெண்கள், 9,120 திருநங்கைகள் என மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 68,000 வாக்குச் சாவடிகள் உள்ளன.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனிடையே, தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற ஞானேஷ் குமார், “அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி, அரசியல் கட்சிகளிடம் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை பெற்று, சட்டப்படி பிரச்னைகள் மற்றும் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

தமிழகத்தை பொறுத்த வரையில், பல அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்றும், ஒரே நபர் 2 வாக்காளர் அட்டை வைத்திருப்பதாகவும், இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இதற்கும் தீர்வு காண வேண்டும். இந்நிலையில், தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மாலை 3 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க., வி.கே.சி., பிரதிநிதிகள் முதல்முறையாக பங்கேற்கின்றனர். கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குவதில் உள்ள குறைபாடுகள், சட்டசபை தொகுதி மற்றும் வாக்குச்சாவடி அளவில் நிலுவையில் உள்ள பிரச்னைகள், வாக்காளர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது, இறந்தவர்களின் பெயர் நீக்கம், வாக்குச்சாவடி அமைய உள்ள இடங்கள் குறித்த ஆட்சேபனைகள், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.