திருத்தணி – திருச்செந்தூர் இடையே விரைவு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- பொதுமக்களின் கோரிக்கையின் பேரிலும், முதல்வர் உத்தரவின் பேரிலும் திருத்தணியில் இருந்து அரக்கோணம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு 191 ஹெச்யூ வழித்தடத்தில் விரைவுப் பேருந்து இயக்கப்படுகிறது.

இந்நிலையில், அதிநவீன சொகுசு பேருந்து சேவையை திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். தினமும் மாலை 6 மணிக்கு திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கும், மாலை 4 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து திருத்தணிக்கும் பேருந்து இயக்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.650 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டது.