திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடை விழா மலர் கண்காட்சிக்கு தயாராகும் வகையில் பிரையன்ட் பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை வரும் 24-ம் தேதி முதல் நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோடை காலத்தை முன்னிட்டு மலைகளின் இளவரசி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கொடைக்கானல் மலைகள் அழகாகக் காணப்படுகின்றன. வெள்ளிநீர்வீழ்ச்சி, கரடிச்சோலை நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, தேவதை நீர்வீழ்ச்சி, ஓராவி நீர்வீழ்ச்சி மற்றும் அஞ்சுவீடு நீர்வீழ்ச்சிகளில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் காடு, தூண்பாறை மற்றும் பசுமை பள்ளத்தாக்கு போன்ற சுற்றுலா தலங்களில் நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர். அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

கோடை காலம் தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக பல்வேறு வகையான மலர் செடிகள் நடப்பட்டு, தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பனிப்பொழிவு மற்றும் மழையால் ஏற்படும் சேதத்திலிருந்து மலர் செடிகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. தற்போது, மலர் செடிகள் பூக்கத் தொடங்கியுள்ளன. கண்காட்சிக்கு முன்பே பூக்கும் பல்வேறு வகையான மலர் செடிகள், பல வண்ண மலர்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளன.
கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கிய பிறகு மே மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கும். அதன்படி, கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 24-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நீடிக்கும். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுற்றுலா மற்றும் தோட்டக்கலைத் துறைகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.