சென்னை: சென்னையில் 5 வகை போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் சாலையோரம் கும்பலாக நின்று காவல்துறையினர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் எழுந்த நிலையில், 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டும் உடனடி அபராதம் விதிக்க போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் ஆணையர் அருண் அனுப்பிய சுற்றறிக்கையில், அதிவேகமாகவும், ஹெல்மெட் அணியாமலும் வாகனம் ஓட்டுதல், நோ என்ட்ரியில் ஓட்டுதல் ஆகியவற்றிற்கு உடனடி அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், இருவருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணித்தல் ஆகியவற்றிற்கும் உடனடி அபராதம் விதிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டுவது, சிக்னல் தாண்டுதல் உள்ளிட்ட பிற விதிமீறல்களுக்கு ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் அபராதம் விதிக்கும் பணி தொடரும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் சாலையோரம் கும்பலாக நின்று வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் எழுந்த நிலையில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், 2. தலைக்கவசம் அணியாமல் பயணித்தல், 3. நோ என்ட்ரியில் ஓட்டுதல், 4. மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், 5. ஒரு பைக்கில் 3 பேராகப் பயணித்தல் ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறதாம்.