கோவை: 2017-ல் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. குறிப்பாக இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரின் சிறப்பு புலனாய்வு குழு கடந்த 2022ம் ஆண்டு முதல் விசாரித்து வருகிறது. டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான குழுவினர் இதுவரை 250-க்கும் மேற்பட்டோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதேபோல், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக கடந்த முறை சசிகலா கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றபோது நடந்த கொலை, கொள்ளை குறித்து நடராஜனுக்கு பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். சம்மனைத் தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.