சென்னை: ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கழிவுநீர் மேலாண்மை மற்றும் ஒலி மாசுபாட்டை தவிர்க்க ஈஷா யோகா மையத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இந்த ஆண்டு சிவராத்திரி விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் சிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் மகா சிவராத்திரி விழா நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், விதிகளின்படி திருவிழா நடத்தப்படுகிறது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோவையைச் சேர்ந்த சிவஞானத்தின் மனுவை ஏற்க எந்த அடிப்படையும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முறையான கழிவுநீர் மேலாண்மை மற்றும் ஒலி மாசுக் கட்டுப்பாட்டை உறுதி செய்யுமாறு ஈஷா யோகா மையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.