புது டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணை கேரள எல்லையை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக பொதுப்பணித் துறை அணையை பராமரித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா நீண்ட காலமாக கோரி வருகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அணை வலுவாக இருப்பதை உறுதிசெய்து, அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் 2014-ல் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு 2011-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தச் சூழலில், மத்திய அரசு சார்பாக அணை பாதுகாப்புச் சட்டம் 2021 நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை மேற்கோள் காட்டி, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பைக் கண்காணிக்க மேற்பார்வைக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த மார்ச் மாதம் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணையின் பராமரிப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்கியது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், திபாங்கர் தத்தா, கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர், “நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் கேரளா தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகிறது” என்றார்.
மத்திய அரசு முன்வைத்த வாதத்தில், “முல்லைப் பெரியாறு அணை மற்றும் பேபி அணையை பலப்படுத்த தமிழகத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கேரளாவிடம் கூறியது. முதலில் அனுமதி வழங்குவதாகக் கூறிய கேரளா, பின்னர் அனுமதி வழங்க மறுத்துவிட்டது” என்று கூறப்பட்டது. “இந்தப் பிரச்சினை தொடர்ந்து இழுபறியாகிக் கொண்டே போகிறது. இதற்குத் தீர்வு காண உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என்று கேரள அரசு வழக்கறிஞர் கூறினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:- அணை பாதுகாப்பானது அல்ல என்று கேரளா குற்றம் சாட்டுகிறது. ஆனால் அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க மறுக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் அணையின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. எனவே, முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பாக மேற்பார்வைக் குழு அளித்த பரிந்துரைகளை 2 வாரங்களுக்குள் செயல்படுத்த வேண்டும். மழைப்பொழிவு உள்ளிட்ட விவரங்களை தமிழக, கேரள அரசுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீதிபதிகள் இதற்கு உத்தரவிட்டனர். அணை பாதுகாப்பானது அல்ல என்ற கேரளாவின் குற்றச்சாட்டை நீதிபதிகள் நிராகரித்தனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.