ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த நேரங்களில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள், அணைகள் மற்றும் குளங்களில் நீர்மட்டம் அதிகரிக்கிறது. குறிப்பாக, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நீர் வழங்கப் பயன்படுத்தப்படும் அணைகளில் நீர்மட்டம் அதிகரிக்கும்.
ஆனால், இந்த முறை, கடந்த ஜூன் மாதம் போதுமான மழை பெய்யாததால், அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்த சூழ்நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் ஓரளவு மழை பெய்து வருகிறது.

இதனால், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால், அனைத்து அணைகளும் நிரம்ப வாய்ப்புள்ளது. மேலும், பார்சன்ஸ் வேலி அணை, ஊட்டி டைகர் ஹில், மார்லிமந்து போன்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
இதனால், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் பார்சன்ஸ் வேலி அணை பகுதியில், தினமும் மழை பெய்து வருவதால், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதன் விளைவாக, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. சரியான நேரத்தில் வடகிழக்கு பருவமழை பெய்தால், அணைகளில் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. தற்போது, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், ஓரிரு மாதங்களுக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.