ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனது குலதெய்வமான அய்யனார் கோவிலை நடிகர் வடிவேலு அபகரிக்க முயற்சிக்கிறார் எனக் கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு, சமீப காலமாக மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
வடிவேலு கடவுள் பக்தி கொண்டவர் என்பதால், அவர் அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்கிறார். அதேபோல் தனது குலதெய்வ கோவிலிலும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்த கோவில் பரமக்குடி அருகே காட்டுப்பரமக்குடியில் அமைந்துள்ளது.

இந்த கோவிலை நடிகர் வடிவேலு தனது ஆதரவாளர்களின் கண்காணிப்பில் பரம்பரை அறங்காவலராக ஒருவரை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி கிராம மக்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்பதால், மக்கள் குழுமி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அங்கு திரண்ட மக்கள், இந்த கோவில் வடிவேலுவின் குலசாமி கோவில் என்றாலும், அவரால் மட்டும் பரம்பரை அறங்காவலராக ஒருவரை நியமிக்க முடியாது என்று கூறினர். அவர் மக்களிடம் ஆலோசிக்காமல் எடுத்த முடிவு ஏற்க முடியாது எனக் கூறி, அவர் செயலை கண்டித்தனர். இந்த விவகாரம் குறித்து நடிகர் வடிவேலு எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.