சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கட்சியின் கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரிய மனு மீது 6 வாரத்தில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோயில் தெருவில் தமிழக வெற்றிக் கட்சியின் கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரி அக்கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சரத்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், திருவீதி அம்மன் கோயில் தெருவின் ஒரு பகுதியில் பல்வேறு கட்சிகள் சார்பில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எங்கள் கட்சி கொடியை ஏற்ற அனுமதி கோரி மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, அந்த பகுதியில் தமிழக வெற்றிக் கட்சி கொடி கம்பம் அமைக்க அனுமதிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத், மனுதாரர் புதிய மனுவை 2 வாரத்தில் மாநகராட்சியிடம் அளிக்க வேண்டும் என்றும், வழக்கை முடித்து வைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 6 வாரத்தில் மனு மீது முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.